மலையகத் தமிழே வாழி!
உதிரம் உதித்த நிலத்தை விட்டு, உழைப்பை நாடி வந்தோம், உள்ளத்தில் உயர்வை விதைத்தோம்-எங்கள் உன்னதத் தமிழை உயர வைத்தோம்! கடாரம் கொண்டான் சோழன்-அது காலம் கடந்த கதை என்றாலும், கால் பதித்த நிலத்தில் எல்லாம்- எங்கள் கன்னித் தமிழைத் தழைக்கச் செய்தோம்! அந்நியர் பேசும் மொழிகளில் கூட அன்னைத் தமிழை நுழைய வைத்தோம் அன்னை என்று அழைத்ததாலோ- அவள் அன்னியர் மொழிகளையும் அரவணைத்துக் கொண்டாள்! குழந்தைப் பேசும் மழலை மொழிப்போல், குறும்பாய் பேசும் செல்லத் தமிழாம்- எங்கள் தமிழ் குண்டு லகரம் இணைத்தே பேசும் மலையகத் தமிழாம்- எம் குலத் தமிழாம், தழைத்திடும் மொழியாம். மொழியறியா ஆளிடமும் மொழி மறந்து பேசியதில்லை, மொழி காத்த என் பாட்டனும் பூட்டனும், மொழி இன்று மொழி கலந்து போயினும், மொழி காக்கும் கழகங்கள் இம்மண்ணில் ஓய்ந்ததில்லை. தாயை மறந்த தனயனும், தண்டமிழை மறந்த தமிழனும் இம்மண்ணில் பிறந்ததில்லை, இனி பிறக்கப்போவதும் இல்லை! தாய்த்தமிழைப் பேணி காப்போம்- எங்கள் தமிழுக்குப் புகழைச் சேர்ப்போம். எழுத்து ஸ்ரீ குமரன் முனுசாமி