அணங்கு
கதிரவன் கடல் மேல் எழுகின்ற கோலம்; காற்றின் ஈரம் காயாத நேரம். அருந்ததியின் கண்ணீரும் காயாமல்தான் இருந்தது. நேற்றையச் சம்பவம் அவள் மனதில் இன்னும் அலைமோதிக் கொண்டிருந்தது. “அருந்ததி, வேலைக்கு மணியாகலையாம்மா? எழுந்திரு” என்றாள் அவளின் அம்மா கோமளவள்ளி. இளம் வயதிலேயே கணவனை இழந்த கோமளவள்ளி ஒற்றை ஆளாக, தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினாள். சிறு வயதிலிருந்தே அம்மாவின் கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்ததால், பெற்றவளுக்கு மேலும் எந்த கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் அருந்ததிக்கு இருந்தது. அதனாலேயே தன் வாழ்வில் நடக்கின்ற பிரச்னைகளைப் பற்றி கோமளவள்ளியிடம் அவள் கூறுவதே இல்லை.
“அருந்ததி.. எழுந்திரும்மா”மீண்டும் தட்டி எழுப்பினாள் கோமளவள்ளி. விழியோரம் பசையாய் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணீரைத் தன் அம்மாவுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டே எழுந்தவள், தாயிடம் முகத்தைத் காட்டாமலேயே குளியலறைக்குள் நுழைந்தாள். குளியலறையில் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணாடியில் தன் சிவந்த கண்களைக் கண்டு அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது. வாயை மூடிக் கொண்டு, விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். “அருந்ததி! என்னம்மா பண்ற? மணியாயிக்கிட்டே இருக்கு” குளியலறைக்குள் போன அருந்ததி ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வராததைக் கண்டு பதறினாள் கோமளவள்ளி. அம்மாவின் கூப்பாடைக் கேட்டு மடமடவென குளித்து வேலைக்கு ஆயத்தமானாள் அருந்ததி.
வேலைக்குப் போவதா இல்லையா என்று நேற்று வரை யோசித்துக் கொண்டிருந்தவள், அம்மாவிடம் எதைக் காரணம் காட்டுவது என்ற எண்ணத்திலேயே வேலைக்குப் போக முடிவெடுத்தாள். ஆனாலும் அவளின் மனதின் ஓர் ஓரத்தில் பயமும் தயக்கமும் இருந்தது. யார் எதைக் கேட்பார்கள் என்ற நடுக்கமும் அவளுக்குள் இருந்தது. “அருந்ததி..காப்பியைக் குடி” என்று ஒரு டம்ளரில் சுட சுட முகத்தின் முன்னே நீட்டினாள் கோமளவள்ளி. காப்பியை வாங்கி அதை குடிக்காமல் யோசனையிலேயே ஆழ்ந்திருந்தாள் அருந்ததி. அவள் முகம் கலையிழந்து கிடந்ததைக் கண்டு கோமளவள்ளிக்குள் குழப்பம் எழுந்தது. “அருந்ததி, என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றாள். “ஒன்னுமில்லம்மா"ன்னு காப்பியை விருவிருவென குடித்துவிட்டு, பையைத் தூக்கிக் கொண்டு காரில் புறப்பட்டாள் அருந்ததி.
வழக்கமான நெரிசல், இடையிடையே முந்திச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள். அருந்ததியி்ன் கார் மெதுவாகவே நகர்ந்தது. அவளின் சிந்தனையும் நேற்றையச் சம்பவத்துக்கே நகர்ந்தது. அந்த இன்ஸ்டாகிராம் தகவல் மட்டும் வராமல் இருந்திருந்தால், அருந்ததியின் இந்தக் காலைப் பொழுது இப்படி விடிந்திருக்காது. எல்லாம் நமக்கென்று வாய்ந்திருக்கும் இந்தச் சமூக ஊடகங்களால் வந்த விளைவுதான்.
மான் விழி, கிளி மூக்கு, ஸ்ட்ரோபேரி இதழ்கள், சங்கு கழுத்து. என்னடா பழைய வசனமாக இருப்பதாக நினைக்கலாம், ஆனால் அருந்ததியின் அழகிற்கு அவைதான் பொருத்தமாக உள்ளன. எல்லா பெண்களைப் போலவே தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தாள் அருந்ததி. ஆனால் அந்த அழகை மற்றவர்களும் ரசிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற எண்ணமும் கூடவே இருந்தது. வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்பார்கள். ஆனால், ஒவ்வொரு நொடியையும் ரசித்து அவற்றை இன்ஸ்டாகிராம் பதிவுகளாகவும் மாற்றினாள் அருந்ததி. அவற்றுக்கு வரும் லைக்ஸ்களுக்கும், கருத்துகளுக்கும் விழி அசராமல் காத்திருப்பாள். இப்படி தனது வாழ்க்கையை இன்ஸ்டாகிராமிலேயே நடத்தி வந்தாள்..
இன்று தனது கைப்பேசியைத் தொடவே நடுங்குகிறாள் அருந்ததி. வரும் அழைப்புகளுக்குக் கூட பதிலளிப்பதில்லை. அத்தனைக்கும் அந்த மிரட்டல் செய்திதான் காரணம். இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் செலுத்திய கவனத்தை, யார் பின் தொடர்கிறார்கள் என்பதில் அவள் காட்டவில்லை. அதில் யாரோ ஒருவரின் செயல்தான் அந்த மிரட்டல் செய்தி.
நேற்று அலுவலகப் பணிகளில் எப்போதும் போலவே முனைப்புக் காட்டி கொண்டிருந்தாள் அருந்ததி. அந்தச் சமயம், அவளைக் கடந்துச் சென்ற உடன் வேலை செய்யும் கனகா, அவளைப் பார்த்து, "இன்னிக்கு என்ன முகத்தில் திடீர் பொலிவு?" என்றாள். உடனே ஒரு செல்பி எடுத்தாக வேண்டும் என தோன்றியது அருந்ததிக்கு. தாமதிக்காமல் கைப்பேசியில் புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினாள். அதற்குப் பிறகு, வரும் லைக்ஸ்க்கும் கமெண்ட்டுகளுக்கும் காத்திருந்தாள். ஆனால் வந்ததோ அவளைக் கொச்சை மொழிகளில் திட்டிய ஒரு கமெண்ட். அருந்ததிக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே அனுப்பியவர் யார் என்று பார்த்தாள். அந்த கணக்குப் போலியானது. அவளைச் சேர்ந்த யாரும் அந்த கணக்கைப் பின் தொடரவில்லை. தனது பிரச்னையை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. ஆனால் யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. சரி, போலி கணக்குதானே என இருந்து விட்டாள்.
ஆனால் மறுநாள் அதே கணக்கில் இருந்து அச்சுறுத்தும் மற்றுமொருச் செய்தி. அவள் பதிவேற்றிய புகைப்படம் ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. அருந்ததியால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அழுவதைத் தவிர வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அனுப்பியவனைக் கண்டபடி திட்டி அனுப்பினாள். ஆனால் அவனோ அடங்குவதாகத் தெரியவில்லை. அவளின் மற்ற படங்களையும் எடிட் செய்து அனுப்பிக் கொண்டே இருந்தான். கணக்கை முடக்கினால் அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக பயமுறுத்தினான். குழப்பத்தோடு பயமும் அவளை ஆட்கொண்டது.
யார் இவற்றைச் செய்வது? எதற்காக செய்கிறார்கள்? இப்படி பல கேள்விகள் அவள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன. அவளால் வேலையைக் கவனிக்கவே முடியவில்லை. பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த கணக்கை ப்ளோக் செய்து விட்டாள். ஆனால் ப்ளோக் செய்தும் அந்த முகம் தெரியாதவன் தனது வேலையை நிறுத்தவில்லை. சொன்னது போல் அருந்ததியுடன் வேலைப் பார்க்கும் சுமதிக்கு அந்த எடிட் செய்த படங்களை அனுப்பிவிட்டான். சுமதி, அருந்ததியைத் தனியாக அழைத்து அனுப்பப்பட்ட படத்தைக் காட்டினாள். “அருந்ததி, என்னடி நடக்குது?யாரிது? ஏன் உன் படத்தை இப்படி பண்ணிருக்காங்க? போலிஸ்ல ரிப்போட் பண்ணியா?” என மூச்சு விடாமல் பேசி முடித்தாள் சுமதி. அவள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அருந்ததியின் கண்ணீர் மட்டும்தான் பதிலாக இருந்தது.
“சரி சரி.. அழாத! இது கண்டிப்பா உன்னையும் என்னையும் தெரிஞ்சவங்கள்ல யாரோ ஒருத்தரா தான் இருக்க முடியும். இல்லனா எனக்கு எப்படி மெசஜ் பன்றாங்க?..உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?..என்றாள் சுமதி. அருந்ததி இல்லை என்று தலையாட்டினாள். “அழுறத மொத நிப்பாட்டு! இந்த படம் எடிட் செஞ்சதுனு பார்த்தாலே தெரிது. நீ ஏன் கவலைப் படற. அந்த அக்காவுண்டை ப்ளோக் பண்ணது ப்ளோக் பண்ணதாவே இருக்கட்டும். வீட்ல யார்கிட்டையும் சொல்லாத. நாம்பலே டீல் பண்ணுவோம். நோ வோரீஸ் டியர். நாளைக்குப் பாத்துக்கலாம் ”என்றாள் சுமதி. அவளின் வார்த்தை அருந்ததிக்கு ஆறுதலாக இருந்தது.
அந்த ஆறுதலோடுதான் நேற்று வீட்டுக்கும் போனாள். ஆனாள் ஒற்றை ஆளாக தன்னை ஆளாக்கிய அம்மாவைப் பார்த்ததும் அவளால் அழுகையை அடக்கிக் கொள்ள முடியவில்லை. "அந்த படங்கள் மட்டும் பரவ ஆரம்பித்தால் எல்லோர் முகத்திலும் எப்படி விழிப்பது? ஒத்த பொம்பளையா இருந்து பொண்ணுங்கள்ல நல்லபடி வளர்த்தெடுத்திருக்கா என்று பாராட்டியவர்கள் என்னவெல்லாம் பேசுவார்களோ?. மனுஷன் நாக்குதான் இப்படியும் பேசும் அப்படியும் பேசுமே! இவர்களுக்கென்ன தெரியும், எங்க அம்மா பட்ட கஷ்டங்களெல்லாம்? வேடிக்கைப் பார்ப்பதும் வெட்டி கதைப் பேசுவதும்தான் இந்த ஊராருக்கு பிழைப்பு. யார் வீட்ல என்ன நடக்கும் என காத்திருக்கும் கூட்டமாச்சே!..."
..இப்படி நேற்று நிகழ்ந்தவை எல்லாம் அருந்ததியின் நினைவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தன. பின்னாடியில் இருந்த கார் அடித்த ஹோன் சத்தத்தில் தன்னிலைக்குத் திரும்பினாள். இதற்கு முன் இருந்த நெரிசல் காணாமல் போயிருந்தது. காரை தன் அலுவலகத்துக்குள் செலுத்தினாள். கார் பார்க்கிங்குக்குள் நுழைந்ததும் சற்று கண் அசரலாம் என்று நினைத்தாள். கண்கள் சொறுகுவதற்குள் யாரோ கார் ஜன்னலை டோக் டோக் என தட்டினார்கள். திடுக்கிட்டுப் பார்த்தாள். எதையோ சொல்ல நினைக்கும் ஆவலோடு காத்திருந்தாள் சுமதி. ஜன்னல் கண்ணாடியை இறக்கி “வாடி உள்ள” என்றழைத்தாள் அருந்ததி. “பரவாலடி, உனக்கு ஒரு குட் நியூஸ். அந்த ஃபேக் அக்காவுண்ட் யாருன்னு கண்டுபுடிச்சாச்சு. உனக்கு நல்ல பழக்கமானவங்கதான். இங்க பேச வேணாம், நீ மீட்டிங் ரூம்கு வா” என்று சட்டென்று அங்கிருந்து சென்றாள்.
“யாரு, எனக்குப் பழக்கமானவங்களா?.. யாரா இருக்கும்??. அருந்ததிக்குக் குழப்பம் அதிகரித்தது. விறு விறுவென்று தனது பேக்கை எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தவள், சுமதியின் இடத்துக்குச் சென்று அவளை இழுத்துக் கொண்டு மீட்டிங் அறைக்குள் புகுந்தாள். “சொல்லுடி..யாரு” என்று சுமதியைக் கேட்டாள். “யாரு..யாரு?” என்று குழப்பத்துடன் பார்த்தாள் சுமதி. “ஏய், நீதான சொன்ன அந்த ஃபேக் ப்ரோஃபைல் யாருன்னு கண்டுபுடிட்சிட்டேனு?..” “எப்படி சொன்னேன், கனவு கண்டியா?..வீட்டுக்குப் போனா, என் வீட்டு வேலையே சரியா இருக்கு. இதுல அவன் யாருன்னு வேற கண்டுப் பிடிக்கணுமா? நேத்து நீ ரொம்ப அழுத, அதான் ஆறுதலுக்கு ரெண்டு வார்த்தைச் சொன்னேன். நீ அதையே புடிச்சாக்காதே. இங்க பாரு அருந்ததி, ரியால்டிக்கு வா. இங்க எல்லாரும் அவுங்க அவுங்க வேலைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அவுங்க அவுங்க பிரச்னைய அவுங்க அவுங்கதான் பாத்துக்கணும். ஒருத்தன் உன் படத்தை எடிட் பண்றான்னா அதுக்கு நீதான் காரணம். நீ ஏன் படத்தை போட்ட.. இப்போ அனுபவிக்கிற.. என்று படபடன்னு பேசிவிட்டு தன் இடத்தில் போய் அமர்ந்தாள் சுமதி.
அருந்ததி வாயடைத்து நின்றிருந்தாள். இதுதான் உலகமா? நேற்று ஒன்று பேசிய சுமதி இன்று வேறு மாதிரி பேசுகிறாள். இங்கு யாருக்கும் யாரும் ஆறுதல் இல்லையா?..இந்தச் சமுதாயத்தில்தான் என் அம்மா எங்களை வளர்த்தெடுத்தாரா?.. இல்லை நான் வாழும் சமுதாயம்தான் இப்படி இருக்கிறதா?
இதற்கெல்லாம் இந்த இண்ஸ்டாகிராம்தான் காரணம்!" என தனது இன்ஸ்டாகிராமைத் திறந்தாள் அருந்ததி. திறந்ததும் சுமதி ஏதோ ஸ்டோரி போட்டிருப்பதைப் பார்த்தாள். அது நமக்காகத்தான் இருக்கும் என்று திறந்து பார்த்தாள். அதில் அந்த போலி கணக்கின் ப்ரோஃபைல் படத்தைப் போட்டு, இப்படி எழுதப்பட்டிருந்தது… “இந்த கணக்குப் போலியானது. இந்த கணக்கின் உரிமையாளர் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுக்கிறார். தயவு செய்து ப்ளோக் செய்யுங்கள். இது ஒரு பெண்ணோடு தீரும் பிரச்னை அல்ல. நாளை உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் நிகழலாம். தனிநபர் மாற்றம் மட்டும் இந்த பிரச்னையைத் தீர்க்காது; ஒட்டு மொத்த சமூகத்தின் சிந்தனையும் மாறவேண்டும். இவ்வாறான போலி கணக்குகளை ஆதரிக்காதீர்கள்!”
எழுத்து: ஸ்ரீ குமரன் முனுசாமி
This comment has been removed by the author.
ReplyDelete