இலக்கணம் மாறுமா?

“ராஜி எழுந்துருங்க..மணி ஆறாகுது. அலாரம் அடிச்சுக் கிட்டே இருக்கு, அத கொஞ்சம் அடைங்களேன்” சமையல் கட்டிலிருந்து சத்தம் போட்டான் கணவன் வினோத்.. முகம் வரை மூடிக் கொண்டிருந்த போர்வையை எரிச்சலோடு விலக்கிவிட்டு, சோம்பல் முறித்தாள் ராஜி. “அய்யய்யய்யே, நொய் நொய்ன்னுக்கிட்டேதான் இருப்பியா நீ? சமையல் வேலைய பாரு!” படுக்கையறையிலிருந்தே கூச்சலிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் ராஜி. எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் வினோத் தன் சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்தான். அதற்குள் இன்னோர் அலாரம் அடித்தது. அது அவனுடைய கைப்பேசி. “பவானி, பரி! எழுந்துருங்க ஸ்கூலுக்கு நேரமாச்சு!” என கூவிக் கொண்டே பிள்ளைகளின் படுக்கையறைக்குள் சென்றான். படுக்கையின் மேல் நெளிந்துக் கொண்டிருந்த தனது இரு பிள்ளைகளையும் தட்டி எழுப்பி “ஹே பசங்களா சீக்கிரம் எழுந்திருங்க! மணியாகுதல்ல.” என பிள்ளைகளை குளியலறைக்குள் அனுப்பும் போதே குக்கர் விசிலடிக்கும் சத்தம் கேட்டு சமயலறைக்குள் குடுகுடுவென ஓடினான் வினோத். “டிங்டோங்” இப்போது, கார்லிங் பெல் சத்தம்.. “மணி ஏழாச்சா, பேப்பர்காரி வந்திருப்பா” என மனசுக்குள்ளே பேசிக் கொண்டே வாசல் கதவைத் திறந்து கீழே கிடந்த பேப்பரை எடுத்தப்படியே எழுந்தான் வினோத். அவன் முன் ஒரு பெண் இரு நாய்க்குட்டிகளோடு நின்றிருந்தாள். “என்னம்மா வேணும்?”..”ப்ரோ, இந்த நாய்க்குட்டிங்க அல்லூர்ல கெடந்துச்சு. யாரோடன்னு தெரில்ல. உங்களுக்கு வேணுமா” என்றாள் அந்த பெண். “கெடாவா?” என்று கேட்டான். “ஆமாம் சார் ரெண்டுமே கெடாதான்” என்றாள் அவள்.. “அப்படின்னா எனக்கு வேணாம்மா’’ என்றான் வினோத். பேப்பரைப் புரட்டிக் கொண்டே வீட்டுக்குள் புகுந்தான். “ஆடவர் தற்கொலை, 4 பெண்களால் பாலியல் தொல்லை” இதுதான் பேப்பரில் இருந்த தலைப்புச் செய்தி. தலைப்புச் செய்தியே இப்படி இருக்கு.ம்ம்ம்..இப்பெல்லாம் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லாம போச்சுன்னு முனவிக் கொண்டே வினோத் டைனிங் அறைக்குள் நுழைந்தான். அவன் வருவதற்குள் ராஜீயும் பிள்ளைகளும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். “அடடா சாப்ட ஆரம்பிச்சுட்டிங்களா. கொஞ்ச நேரம் பொருத்திருங்க. சட்னி செஞ்சுறேன்.” என்றான் வினோத். “அதெல்லாம் வேணாம், இட்லி பொடி போதும்.இதுக்கு மேல நீ சமச்சு நாங்க சாப்டு..விடிஞ்சிரும்” என்றாள் ராஜி கோபத்தோடு. சரி சரி.. நீங்க சாப்பிட்டுகிட்டே இருங்க, நான் சட்டையை மாத்திட்டு வந்தறேன்னு அறைக்குள் நுழைந்தான் வினோத். அரைமணி நேரம் ஆகியும் வினோத் அறையை விட்டு வெளியாகவில்லை. “என்னடா பண்ற எனக்கு மணியாகுது. இங்க இருக்குற மார்க்கெட் போக ஏன் இந்த மினுக்கு மினுக்குற” எரிச்சலோடு அதட்டினாள் ராஜி. “தோ வந்துட்டேன்!” என்று அரைக்கால்சட்டையும் ஒரு மொட்டைக்கை பனியனையும் மாட்டிக் கொண்டு வினோத் அறையை விட்டு வெளியேறினான். “என்னடா சட்டை இது. இத மாட்டிக்கிட்டுதான் வெளிய போவியா? முட்டி தெரியறமாதிரி ஷோர்ட்ஸ், கம்மாங்கட்ட தெரியறமாதிரி ஒரு பனியன். ச்சி போய் மாத்திட்டு வா” என அதட்டினாள் ராஜி. துவண்டுப் போன முகத்தோடு அறைக்குள் நுழைந்தான் வினோத். “நான் உனக்கு க்ரேப் புக் பண்ணிட்டேன், நீ மார்க்கேட்டுக்கு அதுலே போயிரு. நான் பிள்ளைங்கள்ல ஸ்கூல்ல விட்டுட்டு ஓஃபீஸ்க்கு போறேன்னு சத்தமாக சொல்லிவிட்டு, ராஜி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.. “ஹோன்..ஹோன்..” “க்ராப் காரி வந்துட்டா போல” என வேட்டிச் சட்டையோடு அறையை விட்டு வெளியேறினான் வினோத். “அக்கா, துங்கு செகெஜாப்”ன்னு க்ராப்க்காரிக்கிட்ட சொல்லிவிட்டு, வீட்டை ஒருமுறை சரிப்பார்த்து பூட்டிவிட்டு, கிராப் காருக்குள் அமர்ந்தான். “வாவ், அபாங் புன்யா பாஜு சாங்காட் சந்தேக்” என்றாள் அந்த கிராப் காரி. “தெரிமா காசே” என்றான் இவன். ஆனால் அந்த கிராப் காரி வினோத்தையே முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வினோத்துக்குத் தலைப்புச் செய்தி நினைவுக்கு வந்தது. பதற்றத்தோடு “அப்பா தெங்கோக்” என்று கொஞ்சம் குரலை உயர்த்தியே அவளைப் பார்த்துக் கேட்டான். “தாக் டா பாங், இனி மூசிம் பானாஸ்பூன் யூ பாக்காய் பாஜூ மச்சாம் இனிக்கா?” என்று நையாண்டியடித்தாள் அவள். இவளிடமெல்லாம் பேசக்கூடாதுன்னு தன் வேட்டியைச் சரி செய்து முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான் வினோத். வானத்தைப் பார்த்துக் கொண்டு தன் சிந்தனைகளைத் திசைத்திருப்பினான். ஆனால் அந்த திசையையும் திசைத் திருப்ப வைத்தது அவனின் அலைப்பேசியின் சத்தம். “ஹேல்லோ அப்பா..சொல்லுங்கப்பா..” என்றான் வினோத். “யேன்ப்பா பொண்டாட்டி பிள்ளைங்களெல்லாம் எங்கய்யா?..என்று அடுத்த கேள்விக்குத் தயாரானர் அவனின் அப்பா.”யேன்ய்யா, மருமககிட்ட நான் சொன்னத சொன்னியா?. என்னதான் இருந்தாலும், வளர்ப்புப் பிள்ளைங்க நம்ம பிள்ளைங்களா ஆயிருவாங்களா?..உங்களுக்குன்னு பிள்ளைங்க வேணாவா? நீ வந்து ஒரு முறை நான் சொன்ன இடதுல்ல செக் பண்ணிக்குய்யா?..உன்ன மலடுன்னு ஊரு சொல்றத என்னால கேக்க முடியலைய்யா” என்று அழ ஆரம்பித்து விட்டார். “யெப்பா, இப்பா யேன் அழறீங்க? எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. அது போதும். சும்மா தேவையில்லாமல் பேசாதீங்கன்னு” அலைப்பேசியை அடைத்தான் வினோத். மறுபடியும் அலைப்பேசி அலறும் சத்தம் கேட்டது. அன்ஸர் பண்ணவே கூடாதுன்னு ஈரம் வடிந்திருந்த தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தான் வினோத். “ஹேய்..அலார்ம் அடிச்சுக் கிட்டே இருக்கு என்னடி பண்ற”.. அதட்டல் சத்தம் கேட்டு கண்களை விடுக் கென்று திறந்தான் வினோத். இப்போது வினோத் வினோத்தாக இல்லை. ராஜீயாக இருந்தான். இல்லை இருந்தாள். “அட இது வரைக்கும் நாம்ப கனவுதான் கண்டோமா. ஆமா ஆமா.. இவரு நானா மாறி நான் சுமக்கிற சுமையே சுமந்துட்டாலும்.” என்று முணுமுணுத்துக் கொண்டே, போர்வையை விலக்கிவிட்டு, தலையை வாரி முடிந்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் ராஜீ. அடித்தது வினோத்தின் அலாரம் என்றாலும், அவன் இன்னும் குப்புறடித்துத் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறான்…. (நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் எல்லா கனவுகளையும் சமயலறைக்குள் இருக்கும், கெனிஸ்டர்களில் பூட்டி வைத்திருக்கும் இல்லத்தரசிகளின் ஒவ்வொரு காலையும், இப்படிதான் விடிகின்றன. இந்த கதையை எழுதும் போது, ஆண்பால் பெண்பால் தடுமாற்றம் இருந்தது. அப்படி ஓர் இலக்கணத்தை நம் சமுதாயம் நமக்குள் புகுத்தியுள்ளது. இந்த இலக்கணம் மாறுமா??)

Comments

  1. அருமை நண்பா. இப்படியும் ஒரு பேனாவின் கோணமா?
    #வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமூட்டும உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா!

      Delete
  2. நல்ல கதை... வாழ்த்துக்கள்.. 👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

கைப்படாத ரோசா