சைலைபுத்ரி (தொடர்:பாகம் 1)
மாதம் ஒருமுறை அல்லது இருமுறை கேஏல் டூ சொந்த ஊர் பயணம் உண்டு. விடியற்காலையில் கிளம்பினால் நெரிசல் இருக்காது என்பது என் நம்பிக்கை. எப்போதும் அந்த சமயத்தில் கிளம்புவதுதான் என் வழக்கம். அன்று கிரிஸ்மஸ்க்கு முதல் நாள், அதாவது டிசம்பர் 24. அதிகாலை 3 மணிக்கே கிளம்பிட்டேன். எதிர்ப்பார்த்த மாதிரியே சாலையில் காடிகளே இல்லை. ஆனால் என்னவோ அன்னிக்கு என் கண்கள் சொருகிக் கொண்டே இருந்தன. நல்லாதான் தூங்கி எழுந்தேன். இருந்தாலும் தூக்கமாகவே இருந்தது. எப்போதும் இப்படி தூக்கம் வந்தால் காடியை ஒரு ஓரமாக போட்டுத் தூங்குவேன். இல்லைன்னா நான் ஒரு புறம் அலசுவேன், காடி ஒரு புறமாக அலசும். சரி வீடு சேர இன்னும் கிட்டதட்ட ஒரு மணி நேரம்தானே, போயிறலாம்ன்னு தோனுச்சு. ஆனால் என் கண்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. சரி எங்காவது ஓரமா காடியைப் போட்டுட்டுத் தூங்கிடுவோம்னு முடிவுக்கு வந்தேன். அப்போது குவா தெம்பூரோங் கிட்ட வந்தாச்சு. ஏற்கெனவே இதற்கு முன் அங்க காடியைப் போட்டுத் தூங்கியது உண்டு. சரி இங்கேயே ஒரு தூக்கத்தைப் போட்டிடலாம்னு காடியைச் சாலை ஓரமாக நிறுத்திட்டு சீட்டியைப் பின்னாடி நகர்த்தினேன். வானொலி சத்தத்தைக் குறைத்துவிட்டு லேசாக கண் அசர்ந்தேன்.
"ஸ்ரிரிரிரி…" யாரோ என் காதருகே மெல்ல கூப்பிட்டது போல இருந்தது.. திடுக்கென்று கண்விழித்துப் பார்த்தேன். யாரும் இல்லை. பிரமையாக இருக்கும் என்று கண்களை மூடினேன்…"ஸ்ரிரிரி" மீண்டும் அதே குரல்.. இந்த முறை யாரோ என் அருகில் இருப்பது போல் உணர்ந்தேன். ஆனால் சட்டென்று திரும்பவில்லை. யாராக இருக்கும்?.. இது நிஜமா?.. பிரமையா? யார் இது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். சட்டென்று அந்த உருவம் என் கையைப் பிடித்தது. அது மனித கைதான். இப்போது தைரியத்தோடு என் பார்வையை அந்த உருவத்தின் பக்கம் திருப்பினேன்.
வாவ் நான் காண்பது கனவா இல்லை நனவா?.. யாரிவள்? எந்த ஊரு பொண்ணு? செம்மையா இருக்கா.. இப்படிதான் எனக்கு எண்ணம் போனது? அவள் அவ்வளவு அழகு. பார்ப்பதற்கு படநடிகையைப் போல்தான் இருந்தாள். ம்ம்ம் உதாரணத்திற்கு யாரைச் சொல்லலாம்?..சமந்தா?..இல்லை இவள் இன்னும் அழகு. இப்படி என் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்ததன.. "ஹாய் மாலினி, ஐ எம் ஸ்ரீ, இதை சொல்லியே ஆகணும். நீ அவ்வள்வோ அழகு" இப்படி சொல்லணும்னு ஆசைதான், ஆனா சொல்ல முடியல்ல. ஆனால் அவள் நெடு நாள் பழக்கம் போல், “ஸ்ரீ, எனக்கு உங்க உதவி தேவைப்படுது!” என்றாள். சும்மாவே நாம்ப ஹீரோ கணக்குல பீல்டப் பண்ணுவோம். இப்போ சொல்லவா வேணும். பதற்றத்தோடு கேட்பதுப் போல் “சொல்லுங்க நான் என்னப் பண்ணனும்” என்றேன். “என் கூட கொஞ்ச நேரம் வாங்களேன்” என்றாள். “ஓ, ஷுவர்..பட் காடி???” என்று இழுத்தேன். “கார்லே போலம் வாங்க” என்றாள். அவளைப் பார்த்தாள் என்னை விடுவதாக தெரியவில்லை.
யாரிவள்? எங்கு என்னை அழைத்துச் செல்கிறார்? எதற்காக என்னை அழைத்துச் செல்கிறார்? என்று எதை பற்றியும் யோசிக்காமல் அவளுடன் சென்றேன். அவள் கண்களில் ஏதோ காந்தம். காதலுக்கும் காமத்திற்கும் இடையே சுழலும் ஒரு சக்கரம் என்னுள் சுழன்றுக் கொண்டிருந்தது. மலரின் இதழ்களை வருடும் போது உணரப்படுமே அந்த மென்மையை அவள் கை என் மீது படும் போது உணர்ந்தேன். அவள் வாசம் என் நுகர்வுக்கு வரும்போது ஏதோ ஒரு இனம் புரியாத மயக்கம். அந்த மயக்கமே என்னை தலையாட்டி பொம்மையாக்கியது. மௌனத்தைத் தவிர வேறு மொழி தெரியாதவன் ஆனேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அவளுடன் இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. இது தொடர வேண்டும் என்று தோன்றியது..
அவள் காட்டிய வழியிலேயே என் காடியும் நகர்ந்தது. நாங்கள் சென்ற பாதை அடர்ந்த காடாக தெரிந்தது. காடி ஏதும் சென்று வந்திருப்பதாக தெரியவில்லை. ஆனால், செல்லும் வழியெல்லாம் ரெட் கார்பீட் விரித்தது மாதிரி செடி கொடியெல்லாம் வழி விட்டன. சத்தமே இல்லாத காட்டுக்குள் இவள் ஏன் என்னை அழைத்து வந்திருக்கிறாள் என்று கொஞ்சம் கூட யோசிக்க தோனல்ல. அவள் வசம் என் மயக்கம் அப்படி. “தோ உங்க காடிய அங்க நிறுத்துங்க” என்றாள். ஒரு பார்க்கிங் கிடைத்தால் நாம் எப்படி உற்சாகமாகுவோமோ அதே உற்சாகம் அவளிடம் பார்த்தேன். ஆனால், அவளுக்கு அது க்யூட்டாக இருந்தது. இருந்தாலும் ஆளில்லா காட்டுக்குள் அவள் காட்டிய உற்சாகம் கொஞ்சம் ஓவர்தான். இந்த நேரத்துல்ல இங்க யார் பார்க் பண்ணப் போறாங்க என்று நான் மனசுக்குள்ல சிரிச்சுக்கிட்டேன். நமக்குதான் தெரியும்ல. உள்ளுக்குள் சிரித்தாலும் உடலே குலுங்கும். நான் சிரித்தது அவளுக்குத் தெரிந்து விட்டது என்று நினைத்தேன். அவள் முகத்தில் இருந்த உற்சாகம் காணமல் போனது. சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசுவதற்கு ஆய்த்தமாகுவது போல் அவளைப் பார்த்தேன்.
“இங்கதான், காடிய விட்டு வெளிய வாங்க” என்று என் ஆய்த்தத்தை உடைத்தெறிந்தாள். எதையாவது பேசியாக வேண்டும் என்று என் கைகளை அவள் முகத்தருகே எடுத்துச் சென்றேன். ஆனால் அவள் அதை எதையும் கண்டுக் கொள்ளாமல் காடியை விட்டு இறங்கி சென்றாள். ஏமாற்றத்தோடு நான், லைட்டு ஏகோண்ட்னு எல்லோத்தையும் அடைச்சுட்டு, கதவு நல்லா லோக் செஞ்சாச்சான்னு சரிபார்த்துட்டு, காடியை விட்டு இறங்கினேன். அவள் காடியில் இருந்து ஐந்தடி ஒதுங்கி வேறோரு பக்கமாக திரும்பி நின்றிருந்தாள். அந்த இருட்டில் என் கண்ணுக்கு அவள் கொஞ்சம் டெரராகவே தெரிந்தாள். அவள் அருகில் சென்றேன். “என்னங்க” என்றேன். அவள் அசையவில்லை.."என்னங்க” மீண்டும் அழைத்தேன். அவள் திரும்பவேயில்லை. எனக்குள் ஒரு நடுக்கம் எழுந்தது. சின்ன வயதில் இரவு நேரங்களில் கூட இருப்பவர்கள் பேயாக மாறிடுவார்களோ என்ற பயம் இருக்கும். உண்மையைச் சொல்லணும்னா இப்பவும் அந்த பயம் இருக்கிறது. அந்த இருட்டில் நான் அத்தனை முறை அழைத்தும் அவள் திரும்பாதது எனக்குள் அதே பயத்தை மூட்டியது. என் வாழ்நாளில் நான் பார்த்த அத்தனை பேய்பட காட்சிகளும் என் கண் முன்னே வந்து போயின. அந்த பயத்தில் என் இதயத்தை இன்னும் அதிர வைத்தது ஒரு அலறல். ஓட்டத்தை எடுத்தரலாம் என்று தோன்றியது. (தொடரும்..)
எழுத்து:
ஸ்ரீ குமரன் முனுசாமி
Comments
Post a Comment