சைலைப்புத்ரி (தொடர்:பாகம் 2)

அந்த அலறலைக் கேட்டு என் கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன.கண்களை இருக்கமாக மூடிக் கொண்டேன். எடுடா ஓட்டத்தைன்னு ஓட காலைத் தூக்கினேன். அதற்குள் யாரோ என்னை நகர முடியாத அளவிற்கு இருக்கமாக பிடித்துக்கொண்டார்கள். இனிக்கு அவ்ளோதான் என் கதைன்னு நினைத்தேன். உடம்பெல்லாம் வியர்வையில் நனைந்து போய் கிடந்திருந்தது. ஒரு ஐந்து நிமிடம் கண்களைத் திறக்காமல் "முருகா முருகா" என மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்படி சொன்னால் அமுக்கிற பேய் விட்டு விடும்னு எங்கம்மா சொல்லிருக்காங்க. ஆனா என்னை பிடித்துக் கொண்டிருந்த அந்த ஆள் என்னை விடுவதாக தெரியவில்லை. சரி யார்தான் என்று பார்த்து விடுவோம்னு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்களைத் திறந்தேன். பார்த்தால், என்னை அழைத்து வந்த பெண்தான் என்னை இருக்கமாக கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள். அவள் என்னவோ காதலில் என்னை கட்டிக் கொள்ளவில்லை. பயந்து போய்தான் கட்டிக் கொண்டிருந்தாள். அவள் உடல் வியர்த்துப் போயிருந்தது. மூச்சுச் சத்தத்தை அவள் அடக்கி வைத்திருந்தாலும், அவளில் இதயத்தில் இருந்து, "லப் டப் லப் டப்" ஓசை கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அதுவும் அப்போ நல்லாதான் இருந்தது. அவளை விலக்கி விடுவும் மனசில்லை, இணங்கவும் தைரியமில்லை. "என்னங்க" என்றேன். "ம்ம்ம்ம்ம்" என்றாள். "என்னங்க ஆச்சு" என்று கேட்டேன். அதற்கு அவள் ஒரு திசையைக் காட்டி, "யானை கனைச்சது, பயந்துட்டேன்" என்றாள். "யானையா" என்று பயத்தில் நான் அலறினேன். சட்டென்று அவள் என் வாயை அவள் கைகளால் மூடினாள். அப்போதே என் வாயடைத்துப் போய்விட்டது. போதாதென்று மெல்லமாக என் காதருகே அவள் நெருங்கினாள். உதட்டின் அசைவுகள் கூட சத்தம் போடதவாறு மென்மைக்கும் மென்மையான குரலில் சத்தம் போடாதீங்க என்றாள். அவளின் அந்த ஸ்பரிசம் என் அசைவுகளைக் கட்டிப் போட்டது. நான் அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டேன். "என்னங்க" இந்த குரல் மட்டும் என் காதுகளில் விழுந்தாலும், என் உடல் அசைய மறுத்தது. அவள் பலமுறை என்னை அழைத்தாள், எனக்கும் விளங்கியது. ஆனால் என்னால் அசைய முடியவில்லை. ஒரு வித மயக்கம் என்னை ஆட்கொண்டிருந்தது. அவளும் பொருமையா பல முறை கூப்பிட்டுப் பார்த்தாள். நான் அசையாதிருந்ததைக் கண்டு, கடுப்பாகி என்னை பிடித்துக் குலுக்கினாள். அவள் குலுக்கிய குலுக்கில் வேற்றுலகத்தில் இருந்து பூமிக்கு வந்த்தது போல் உண்ர்ந்தேன். ஆனால் இப்போது அவள் என்னை அணைத்திருக்கவில்லை. கொஞ்சம் விலகி ஒதுங்கி நின்றிருந்தாள். இப்போது அவள் முகத்தில் நாணத்தைக் கண்டேன். எனக்குள்ளும் அது ஒட்டிக் கொண்டது. அவளை நேருக்கு நேர் பார்ப்பதில் ஒருவித தயக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், கேட்க வேண்டியதைக் கேட்டே தீர வேண்டுமென "என்னங்க, என்னங்க இடம் இது. எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்க. யானைங்கிறீங்க, கனைக்குதுங்கிறீங்க. உங்களுக்குத் தெரிஞ்சுதான் இங்க வந்தீங்களா?. வாங்க இங்கேர்ந்து போயிருலாம் என்றேன். அவள் என்னை பார்த்தாள். அவள் கண்களில் ஒரு வித ஏக்கம் இருந்த்து. "என்னங்க ஆச்சு" என்றேன். "ஸ்ரீ, உங்களை நான் விரும்புறேன்! உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கிறேன்" என்றாள்.எனக்குத் தூக்கி வாரி போட்டது. உதவியென்று வந்தவள் கல்யாணம் என்கிறாளே என்ற குழப்பம் இருந்தது. "யாருங்க நீங்க, திடிர்னு வந்தீங்க, ஏதோ உதவி வேணும்னு சொன்னீங்க. நானும் சரின்னு சொன்னேன். கடைசில்ல காட்டுக்குள் கூட்டிட்டு வந்து, காதல் கல்யாணம்னு சொல்றீங்க?" என்றேன். ஆனால் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. என் அருகே வந்து என் கண்களை உற்று நோக்கினாள். பறவைகளின் கீச்சல்களும், காற்றில் அசைந்த செடிகொடிகளின் சலசலப்புகளும் ஒரு நிமிடம் நின்று போயின. அவளின் கண்கள் கூர்மையான ஆயுதமாய் அக்கணம் எனக்குத் தோன்றியது. அவள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்குள் என்னவோபோல் ஆனது. அவளின் பார்வையில் இருந்து என் கண்களை மீட்டுக் கொண்டேன். நான் விலகிச் செல்லும் போது அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் கண்களின் ஓரம் ஒரு நீர் துளி கசிந்து விழுவதாக இருந்தது. அதை சட்டென்று என் விரல்களால் ஏந்தி கொண்டேன். ஆனால் அவளோ அப்படியே சிலையாகத்தான் நின்றிருந்தாள். "என்னங்க ஆச்சு" என்று மீண்டும் அவளைக் கேட்டேன். "நான் சைலைபுத்ரி. உங்களுக்கு என்னை யாரென்று தெரியாது. ஆனால் உங்களை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். இரவுகளில் நான் என் தோழிகளுடன் இந்த பகுதியில் உலா வருவது சகஜம். அப்படி சுற்றித்திரியும் போது, யாராவது எங்களின் கண்களில் பட்டால் அவர்களைத் தொந்தரவு செய்வது எங்களுக்கு விருப்பமான ஒன்று. அப்படி ஒரு முறை, நீங்கள் சாலை ஓரமாக வாகனத்தைப் போட்டு உறங்கி கொண்டிருந்த போது உங்களைத் தொந்தரவு செய்யலாம் என்று நானும் என் தோழியும் உங்களை நெருங்கினோம். ஆனால் உங்களைப் பார்த்தவுடன் எனக்குள் ஓர் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. எப்போது எங்கேயோ பார்த்தது போல தோன்றியது. மிக நெருக்கமாக இருந்த ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பது போன்று இருந்தது. தொந்தரவு செய்ய வந்த நான் மலைத்துக் கிடந்ததைப் பார்த்து என் தோழிகள் என்னை உடனே அங்கிருந்து அழைந்துச் சென்று விட்டனர். அதன் பிறகு கொஞ்ச நாளாகவே உங்கள் நினைவிலேயே வாடிக் கிடந்தேன். என் பேச்சு நடவடிக்கைகள் எல்லாம் மாறி போனது. இது என் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்ததும் வேறொருவருக்கு என்னை கல்யாணம் செய்து கொடுக்க தயாரானார்கள். நான் கல்யாணம் பண்ண உங்களைதான் பண்ணுவேன்னு சொல்லிட்டேன். எவ்வளவோ என் மனதை மாற்ற முயற்சித்தார்கள். நான் தற்கொலை முயற்சிக்குப் போன் பிறகுதான் என் ஆசைக்கு அவர்கள் அனுமதித்தார்கள்." தற்கொலையா??.. என்னங்க சொல்றீங்க??. நான் யார் என் பின்னணி என்ன என எதுவும் தெரியாம ஏன் இந்தளவுக்குப் போனீங்க என்று நான் பதறினேன். அவள் என் கைகளைப் பற்றிக் கொண்டாள். "நீங்க யார் உங்கள் பின்னணி என்ன என்பது எனக்கு அவசியமற்றது. எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. என மனதிலும் நினைவிலும் நீங்கதான் இருக்கிறீங்க. என்னை கல்யாணம் பண்ணீப்பீங்களா??" என்று ஏக்கத்தோடு அவள் என்னைப் பார்த்தாள். இருண்ட காட்டில், அவள் முகம் மட்டும் நிலவின் ஒளிப் போல பிரகாசமாக தெரிந்தது. அவளின் கண்களில் இன்னும் ஈரப் பசை காயாமல் தான் இருந்தது. ஆனால் அது அப்போது அவளுக்கு ஆழக்கைக் கூட்டியது. இவளை மிக தாமதமாக பார்த்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றியது. இப்படி ஒருத்தியை இனி எங்குப் போய் நான் தேடுவேன். அதுவும் அவளே காதலை வெளிப்படையாக சொல்லிவிட்டாள். இதற்குமேல் நான் ஏன் தயங்க வேண்டும். அனாலும் நமக்குன்னு ஒரு கெத்து இருக்குமில்லையா "ரொம்ப ஆசை வச்சீட்டிங்கன்னு நினைக்கிறேன். ம்ம்ம்ம்ம் ஓகே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றேன். ஆனா.. என்று என் அடுத்த வரியை முடிப்பதற்குள் அவள் என்னைக் கட்டி அணைத்து ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டாள். முதலில் மெல்லமாகத்தான் அழுதாள். போக போக அவள் அழுகை அலறலாக கேட்க தொடங்கியது. அந்த சத்தம் என் காது ஜவ்வைக் கிழித்திடுவது போல் இருந்தது. நான் காதுகளைப் போத்திக் கொண்டேன். ஆனால் என் கண் முன்னே அரங்கேறிய காட்சி..(தொடரும்..)
எழுத்து:
ஸ்ரீ குமரன் முனுசாமி

Comments

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

கைப்படாத ரோசா