இன்றை நேசிப்போம்
"இன்று" இது எவ்வளவுப் பெரிய வரம் என்பதை உலகம் இன்று உணர்ந்திருக்கும். உலகமே அரண்டுப் போய்க் கிடக்கிறது. அப்படி ஒரு பாதிப்பைக் கொரொனா ஏற்படுத்தியுள்ளது. கொரொனா, பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல. அதிரும். எத்தனையோ உயிர்களைக் கொன்னு குவித்த பாவி அது. இன்று நாம் ஒவ்வொரு நாளும், எத்தனை பேர் மரணித்திருக்கிறார்கள் என கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதைவிட கொடுமை வேறு எதுவாக இருக்க முடியும். யாரும் நினைத்தப் பார்க்காத நிலையில் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். இது மனிதனே மனிதனுக்கு ஏற்படுத்திவிட்ட பேரழிவே தவிர வேறு எதுவும் கிடையாது.
ஆம். இறைவன் தந்த அழகான பூமியை மாசுப் படுத்தினோம். இறைவன் படைத்த உயிர்களைத் தன்னூண் பெருக்கத்துத் தின்று மகிழ்ந்தோம். அகழ்வாரைத் தாங்கும் நிலம் திருவள்ளுவர் காலத்திலேயே காலவதியாகிவிட்டது. அப்படியும் இன்று இருந்தாலும், நாம் என்ன வள்ளுவன் வாக்கை மதித்து வாழ்கிறோமா? ஐய்யய்யோ இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் இந்தியர்கள் என ஒதுங்கிக் கொள்ள போகிறோமா? பிரச்னைகளுக்குப் பொறுப்பேற்க யாரும் முன் வர மாட்டார்கள். ஆனால், பிறரைக் கைக்காட்டித் தப்பித்துக் கொள்ள முயல்வது சரியாகாது. மனிதக்குலத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். இல்லையென்றால், இவன் இதை திருடிட்டான், அவன் அதை திருடிட்டான்னு கூப்பாடுப் போட்டுக் கொண்டிருக்க மாட்டோம். அப்படியும் திருடினால் என்ன, இல்லாதவன் இருப்பவனிடம் எடுத்துக் கொள்கிறான். "இருப்பவன்" ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை நாம் கடைப்பிடிக்கிறோமா? இப்படிதான் வாழ வேண்டும்னு வாழ்ந்து காட்டுகிறோமா? அப்படி இருந்தால் இன்று நாம் போடும் கூப்பாடுக்கு அர்த்தம் உள்ளது. ஒருவன் பகிர்ந்ததை இன்னொருவன் பகிர்வது இனத்துக்காக நீங்கள் செய்யும் தொண்டாகாது. நல்வழியில் சமூகத்தைக் கட்டிக் காப்பதே நாம் செய்ய வேண்டிய கடமை.
இன்று கொரோனா ருத்ரத் தாண்டவம் ஆடுகிறது. அதை அடக்க உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. எப்போது யாருக்கு என்ன ஆகுமோ என்ற பயம் ஒரு புறம். ஏன் நமக்கே எதாவது ஆயிருமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றோம். என்றைக்காவது ஒருநாள் இறக்கப் போகிறவர்கள்தானே. போற உயிர் கொரோனாவில் போகுது என்று இருந்து விட வேண்டியதுதானே. ஆனால் ஆசைகளும், கனவுகளும் அதை விட மரணப் பீதி நம்மை ஆட்கொண்டு நமது செயல்களைக் கட்டிப் போடுகின்றன. மரணப் பீதியில் மனிதம் சில இடங்களிலும், மிருகம் பல இடங்களிலும் துளிர்விட ஆரம்பித்திருக்கின்றன. இதுதான் கலிபுருஷனின் ஆட்டமா?
யாருங்க அந்த கலி, அவளோட புருஷனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க..நாம் இன்று வாழும் கலியுகத்தின் அரசன் அவன். தீமைகள் தலைத்தோங்க, நன்மைகள் அஞ்சி அடங்கும் காலம் கலியின் முற்று என்கிறது மறைநூல். உயிரைக் காப்பாற்றும் தெய்வங்களாக மருத்துவர்களையும், தாதியர்களையும், மருத்துவ ஊழியர்களையும், காவல்படையையும், ராணுவப்படையையும் வர்ணித்துப் போற்றுகின்றோம். இதை உணர்த்த பல உயிர்கள் பலியாகின. இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் இதை உணர வேண்டுமா? இதில் இன்னும் உணராதவர்களை என்னென்று சொல்வது. உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் இவர்களின் அர்ப்பணிப்பு நிச்சயமாக போற்றக் கூடியது. ஆனால் நாம் இவர்களுக்குச் செய்ய வேண்டியது பூஜை புனஸ்காரங்க கிடையாது, வீட்டிலேயே இருங்க வேண்டியதுதான்.
பல சமயங்களில், விடுப்புக் கிடைக்கலையே என்று வருத்தப்பட்டவர்களுக்கு 2 வார நடமாட்டுக் கட்டுப் பாடு அறிவித்த சமயத்தில் ஐய்யா ஜாலி என இருந்திருக்கும், ஆனால் அதை முடிப்பதற்கு முன்பே அய்யோ போரடிக்கிறது என சமூகவலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்துவிட்டனர். இப்போது வழக்கநிலைக்கு ஏங்குகிறார்கள். வாழ்க்கை எப்படி இருந்தாலும் பிரச்னைன்னா அது வேறு என்னதான் செய்யும். இனிமேலாவது வாழ்க்கை அமைப்பைக் குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வாழுகின்ற ஒவ்வொரு நொடியும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் அவகாசம். அதை மதியுங்கள்.
உறவுகளோடு சண்டை, பேசி பல நாளாகுது என விரிசல்களில் காலத்தை நகர்த்தி இருப்போம். இன்று தள்ளி நின்று பேசுங்கள் என்கிறார்கள். தலைசாய மறந்த அம்மாவின் மடி, அப்பாவின் தோள் இனி எப்போது கிடைக்க போகிறது என்ற நிலை. அருகில் இருந்த போது அடித்துப் பேசி மகிழாத சகோதரர்கள், நண்பர்களுடன் இன்று தொலைவில் இருந்து கையடக்ககருவிகளின் வழி பேசிக் கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு இந்த நிலை பெரிதாக தெரியாவிட்டாலும், நாளாக நாளாக இது நரக வேதனையாகும். தனிமை கொடியது என உணர்வோம். கிடைத்த பல "இன்றுகளை" வீணடித்திருக்கிறோம். இனியும் வீணாக்குப் போகிறோமா?
நாளை மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. எதுவும் நிரந்தரம் இல்லை என்ற நம்பிக்கை ஓங்குகிறது. மனம் நிலைப் புரியாமல் தள்ளாடுகிறது. சுவாசிக்கிற காற்றின் மீதே சந்தேகம் எழுகிறது. பயம். அதை தூர வீசுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். இந்த நிலை மாறும். ஆனால் இந்த நொடியை பயத்தில் கரைக்காதீர்கள். இன்று இனி கிடைக்காது. அதை உடன் இருப்பவரோடு சந்தோஷமாக கழியுங்கள். இன்றை நேசியுங்கள்.
அன்புடன்,
ஸ்ரீ குமரன் முனுசாமி
நாளை மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. எதுவும் நிரந்தரம் இல்லை என்ற நம்பிக்கை ஓங்குகிறது. மனம் நிலைப் புரியாமல் தள்ளாடுகிறது. சுவாசிக்கிற காற்றின் மீதே சந்தேகம் எழுகிறது. பயம். அதை தூர வீசுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். இந்த நிலை மாறும். ஆனால் இந்த நொடியை பயத்தில் கரைக்காதீர்கள். இன்று இனி கிடைக்காது. அதை உடன் இருப்பவரோடு சந்தோஷமாக கழியுங்கள். இன்றை நேசியுங்கள்.
அன்புடன்,
ஸ்ரீ குமரன் முனுசாமி
அருமை !!!அருமை !!!அருமை !!!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete