I'm Single!




“கல்யாணம் இப்பெல்லாம் அடிக்கடி கேட்கிற வார்த்தையாயிருச்சு. இந்த வார்த்தைய வெறுக்கிறேனா இல்ல விரும்ப ஆய்த்தமாகிட்டேனான்னு எனக்கே இப்போ சந்தேகமாயிருச்சு. இதுல்ல இவனுக்குக் கல்யாணம், அவனுக்குக் கல்யாணம்னு பத்திரிக்கைய வேற நீட்டிறானுங்க… கடுப்பேத்திக்கிட்டு!” என் எண்ணம் ஒரு புறம் போய்க் கொண்டிருந்தது. பயணித்த கார் ஒரு புறம் போய்க் கொண்டிருந்தது. எங்கென்னு கேட்கிறீங்களா? வேலைக்குதான். ம்ம்ம் இந்த டிரஃபிக் ஜேம் வேற. உங்களுக்குத் தெரியாதா, காலையிலே அதுவும் பூச்சோங் ரோட்ல. சொல்லவா வேணும். இதுல ஆயிரத்து எட்டு டிரஃபிக் லைட்ஸ். ஒவ்வொரு முறையும் வாகனத்த நிறுத்தும் போதும், இந்த கல்யாண விஷயம் நெனப்புக்கு வருது. நான் என்ன மாட்டேன்னா சொல்றேன். அமைஞ்சா பண்ணமாட்டோமா. இதுல ஆபிஸ்ல உள்ளவங்க வேற எப்படா கல்யாணம் எப்படா கல்யாணம்னுக்கிட்டு. ஆமா, இந்த ஆபிஸ்ல, அப்படியே இளஞ்சிட்டுகளா இருக்குறாங்க. எல்லாம் வயசான கட்டைக! என்ன பண்றது. எல்லாம் என் தலைவிதினு இருக்க வேண்டியதுதான். 

இதோ என் வசந்த மாளிகைக்கு வந்தாச்சு.. என்ன தேடுறீங்க. இதோ இதுதான். என் ஆபிஸதான் சொன்னேன். இன்னிக்கு வேலைக்குக் கொஞ்சம் லேட்டுங்க. ஆனா ஏதோ தேசக்குத்தம் பண்ணிட்டா மாதிரி எல்லா கெழடுகளும் முறைச்சுப் பாக்குங்க. பாருங்க பாருங்க பாக்குதுங்களா. அப்படியே கண்ணைப் புடுங்கி எடுக்கலாம் போல இருக்கு. என்னத்தப் பண்றது. என்னை ஜப்பான்ல கூப்டாங்க, அமெரிக்கால கூப்டாங்க, ஏன் சிங்கப்பூர்ல கூட கூப்டாங்க. என் கெரகம் இங்க வந்து மாட்டிக் கிட்டேன். பேருக்குதான் ஆபிஸ் வேலை. ஆனா ஏதோ குடோன்ல வேலை செய்யற மாதிரியே இருக்கு. என்ன பாக்குறீங்க. அப்போ எதுக்கு இங்க வேலை செய்யறேன்னு கேக்குறீங்களா?. மய்ன்ட் வாய்ஸ் பலமா இருக்கு. ஹிஹி.. வயசான அம்மா அப்பா. கல்யாண வயசுல இருக்குற தங்கச்சி. இப்படியெல்லாம் செண்டிமெண்ட் கதையெல்லாம் இல்லைங்க. வேற எங்கேயும் வேலை கிடைக்க மாட்டுது. அதுக்குக் கிடைச்ச வேலையையே செஞ்சுட்டுப் போயிரலாம்னுதான் புலம்பனாலும் இங்கேயே இருக்குறேன். சரிங்க உங்கக்கிட்டேயே பேசிக்கிட்டு இருந்த என்ன ஆகுறது. நான் வேலையைப் பாக்குறேன். அய்யோ யம்மா...

எங்க..எங்கப் பாக்குறீங்க கீழே.. நான் தான். லெப்டோப ஓன் பண்ணிட்டு வீட்லேருந்து எடுத்துட்டு வந்த காப்பிய எடுக்கலாம்னு திரும்பினேன் அப்படியே நாற்காலி உடைஞ்சு தெறிச்சுக் கிட்டு விழுந்துட்டேன். என் மானமே போச்சு. இதுக்கு மட்டும் இந்த கூட்டம் எங்கிருந்துதான் வருமோ. எனக்குன்னு ஏன்தான் இப்படி நடக்குதோ. ஆளாளுக்கு யூ ஒகே யூ ஒகேவான்னு கேட்டுக்கிட்டே இருக்குறாங்க. "யா யா ஐம் ஒகே, நான் பாத்துகுறேன்" நான் யார் முகத்தையும் பாக்கல்ல. எப்படிங்க பாப்பேன். எங்க வேற எதாவது நாற்காலி இருக்கா. ஓப்ஸ் யாரோ  தெய்வம் மாதிரி நாற்காலிய எடுத்துக் கொடுத்துருக்காங்க. அந்த தெய்வத்தோட முகத்தைக் கூட பாக்கல. அப்படியே கமக்கமா ஒக்காந்து வேலையை பாக்க ஆரம்பிப்போம். ம்ம்ம் கூட்டம் ஒரு வழியா கலைஞ்சிருச்சு. ஆனா, கெழடுங்க நொய் நொய்ன்னுக்கிட்டேதான் இருக்குதுங்க. நீங்களே பாத்தீங்கதானே, தெரிஞ்சா விழுந்தேன். வேணும்னு விழுந்தமாதிரி என்ன குத்தம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நாற்காலி உடைஞ்சிருச்சாம்.

சரிங்க கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டுப் பார்க்கலாம்!

"தம்பி, சாப்பிட போல?".. ஓ நம்ப ரமேஸ் அண்ண. இல்லண்ண அப்புறம் போய்கிறேன். அதுக்குள்ள லஞ்ச டைம் வந்துருச்சா. ஓ..நீங்க இன்னும் இங்கதான் இருக்குறீங்களா. லஞ்சுக்கு ஒன்னாதான் போவோம். அதான் எல்லாரும் கூப்டு போறாங்க. நாம்ப லேட்டா போவோம். இல்லனா விழுந்தத பத்தியே பேசுங்க. "எஸ்கியூஸ் மி".. இது யாரு.. வாவ் யாருங்க இவுங்க புதுசா இருக்காங்க. வயசு இருந்தா கிட்டத்தட்ட 25 இருக்கும். அழகுன்னா அவ்வளவு அழகு. சமந்தாவையும் நயன்தாராவையும் சேர்த்து வச்சு பாக்குற மாதிரி இருக்கு. அவுங்க என்னையப் பார்த்துதான் பேசுறாங்க, ஆனா என்ன பேசுறாங்கன்னு தெரில. காது ரெண்டும் அடைச்சுக்கிச்சு. இதுதான் அழகுள்ள மயங்குறதா??? "ஹேல்லோ?" அவுங்கதான்.."ஆங் சொல்லுங்க".. இது நானு. "லஞ்சுக்குப் போலையான்னு கேட்டேன்?".. "இல்லைங்க, பசிக்கல்ல.." ஒரு சின்ன ஸ்மாய்ல் அவுங்க முகத்துல. "சரி.. அடி எதாவது பட்டதா?" அய்யோ, அப்போ நான் விழுந்தது இவுங்களும் பாத்துட்டாங்களா?.. இருந்தாலும் குமரா உன் கெத்த மெய்ண்டேன் பண்ணு. " யா யா, ஐம் பெர்ஃபேக்லி ஆல்ரைட்".." சரி நான் லஞ்சுக்குப் போறன். சீ யூ லேட்டேர்"ன்னு அவுங்க போய்ட்டாங்க.

எங்க அந்த கெழ மனேஜர். "ஹெல்லோ சார்ர்ர். ஹௌ ஆர் யூ".. "என்ன சொல்லு".. கெழம் கெழம் என் மூஞ்சக்கூட பாக்கலே.. பரவால்ல நாம வந்த வேலைய பார்க்கலாம். " சார்ர்ர்ர்ர்... யாரு சார் அந்த புதுப் பொன்னு?".."ம்ம்ம் இண்டெர்ன். இன்னும் மூனு மாசம் இங்கதான் இருக்கும்" "ஓஓஓ அப்படியா சார். அவுங்க பேரு சார்?".."ம்ம்ம் அஞ்சலி" சிடு மூஞ்சு. அத கொஞ்சம் அழகா சொன்னாதான் என்ன. எவ்வளவு அழகான பேரு அஞ்சலி. ஆளுக்கேத்தப் பேரு. "அஞ்சலி அஞ்சலி புஸ்பாஞ்சலி.. கவிதை கவிதை.." எப்படியாவது இந்த அஞ்சலிய என் அஞ்சலையா ஆக்குறேன். ஒகே ஒகே லஞ்ச முடிச்சுட்டு ஒன்னு ஒன்னா வருதுங்க.. நாம போய் நம்ப எடத்துல உட்காருவோம். 

வராங்க வராங்க.. எங்கிட்டதான் வராங்க.. "ஹாய் குமார், இன்னும் பசிக்கலையா?" "இல்லை..ஹிஹி"..டேய் கொண்ட்ரோல் யுவர் செல்ஃப்.. ரொம்ப வழியுற. "குமார், உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்".."ஆ சொல்லுங்க".. நீங்க ரகு அங்கிளோட சன் தானே"..ஆ இவுங்களுக்கு எப்படி எங்கப்பாவ தெரியும். " ஆமா, யேன்?".. "ஓ. தேத்ஸ் கிரேட். நம்ப சொந்தகாரவங்க! நீங்க என்னோட கசின் தெரியுமா. முதல்ல இந்த ஆபிஸ்க்கு வர பயந்துக்கிட்டு இருந்தேன். அப்பாதான் சொன்னாரு நீங்க இந்த ஆபிஸ்லதான் இருக்குறீங்கன்னு. இப்போதன் நிம்மதியா இருக்கு. இந்த தங்கச்சிய பத்திரமா பாத்துப்பீங்களா அண்ண?" "அண்ண??" இப்போ நான் என்ன ரியக்ட் பண்ணனும்னு நெனக்குறீங்க. இவ்வளவு தான். என்னால சிரிக்கவும் முடில அழுகவும் முடில. இட்ஸ் ஒகே..."ஓ அப்படியா. கண்டிப்பா பாத்துக்குறேன்! டோண்ட் வரி.. இப்போ கொஞ்சம் வாஷ் ரூம் வரைக்கும் போய்டு வந்துறேன்".. 

வாஷ் ரூம் வரைக்கும் வந்துட்டீங்களா??. என்ன பாக்குறீங்க.. கண்ணு வியர்க்குது. நான் என்ன பண்றது. யேங்க நீங்களே சொல்லுங்க. இப்படி ஒரு தங்கச்சி இருக்குன்னு யாராவது என் கிட்ட முன்னாடியே சொன்னாங்களா? எங்கிருந்து வந்தது இந்த புது தங்கச்சி. மனசுல்ல எவ்ளோ ஆசைய வச்சிருந்தேன். சரி சரி பார்த்தோனே பத்திகிச்சு. நான் என்ன பண்றது. இதுக்கு முன்னுக்கு யார்க்கிட்டேயும் இப்படி தோணலையே. இப்பதான் துளிர்விட ஆரம்பிச்சது. அதுக்குள்ள அண்ணன்னு சொல்லி இப்படி முடிச்சுட்டாங்களே. எங்கப்பாவே சொல்லணும். சொந்தக்காரவங்க யாரையும் கண்ணுல் காட்டாமலேயே வளர்த்துட்டாரு. இப்போ நான்தான் அனுபவிக்கிறேன். தோ எங்கப்பாவுக்கு ஆய்சு நூறு. ஃபோன் பண்றாரு. " ஹேல்லோ, என்னப்பா சொல்லுங்க.." " டேய் உங்கப் பாட்டி, எங்கம்மாவோட தங்கச்சியோட ஓரகத்தி இருக்காங்கல்ல, அவுங்க மகனோட மனைவியோட தம்பி மகள் உன் ஆபிஸ்லதான் வேலைக்கு வருதாம். பாத்துக்கோ." அப்...ம்ம்ம் வச்சுட்டாரு. இப்படியாங்க ஒரு மனுஷன்ன கொழப்பறது. ம்ம்ம்ம் எங்க பாட்டியோட தங்கச்சின்னா, எனக்கும் பாட்டிதான். அவுங்ளோட ஓரகத்தியும் எனக்குப் பாட்டிதான். அப்பாவுக்கு அம்மா முறைதான். அவுங்க மகன் எனக்கு சித்தப்பா. சித்தப்பா மனைவி சின்னம்மா. சின்னம்மா தம்பி மாமா. ஹா..மாமா. மாமாவோடு மகள்?? முறைப் பொண்ணு!!!!!!!!

என்னங்க என் மூஞ்சில ஒரு பிரகாசம் தெரியுதா?.. தெரியணும்.. சரி சரி.. இனிமேல் நடக்க வேண்டியத நான் பாத்துக்குறேன். ஐயா இனிமேல் ரொம்ப பிஸி ஆயிருவேன். அடுத்த முறை சந்திக்கலாம்.. பாய்....அட நீங்க இன்னும் போலயா????  போங்க பாஸ்!!!



சுபம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

கைப்படாத ரோசா