ஆறின ரணங்கள்



முதல் பட்டம் வானில் பறந்தால் அதுவும் ஒரு வெற்றி. முதல் முறை இமயம் தொட்டால் அதுவும் ஒரு வெற்றி.  மத்தவங்களுக்கு பெருசா படுற வெற்றி நமக்கு சிறுசா படலாம்..  நமக்கு பெருசா படுற வெற்றி மத்தவங்களுக்கு சிறுசா படலாம். ஒருவரோட வெற்றியின் கனத்த  நம்மளோட மேலோட்ட பார்வையில முடிவு பண்ணிட கூடாது. அந்த வெற்றிக்கு பின்னாடி இருக்குற கதையும், அத அடைய அவுங்க சந்தித்த சாவல்களுமே அதன் கனத்த உறுதி செய்யும். 

"அப்படி என்ன சாதிச்சுட்டான்னு இப்படி ஆடுறான்"ன்னு காதுப் பட பேசறவங்களும், காதுப் படாம பேசறவங்களும் இருக்கதான் செய்றாங்க. அதுக்கெல்லாம் வருத்தப்படுவதும், மனமுடைஞ்சு போறதும், என் ஸ்டாய்ல் இல்ல. ஏன்னா பேசறவங்க யாரும் எனக்குத் தோள் கொடுத்ததும் இல்ல, அவுங்க பேசறது எதுவும் கால் காசுக்கு ப்ரியோஜனமும் இல்ல. அப்படி மனமுடைஞ்சு போற ஆளா இருந்தா நான் எப்பயோ போயிருக்கணும். ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கேக்காத பேச்சுகளா? பார்க்காத அவமரியாதைகளா?.. ஆனா அதுக்கெல்லாம் நன்றி சொல்லணும். ஏன்னா அதுதான என்ன இன்னும் ஸ்ட்ரோங்கா ஆக்கிருக்கு. 

மொத மொத ரேடியோல, செய்தி வாசிக்க வாய்ப்பு கெடச்சப்போ, ரொம்ப சந்தோஷப் பட்டேன். ஆனா சொந்த ஊர விட்டு, அம்மா அப்பாவ விட்டு, தனியா இருக்கப் போரோமேன்னு, பயமும் கவலையும் இருந்துச்சு. பரவால பாத்துக்கலாம்னுதான் இங்க வந்தேன். ஆனா தொடக்க காலத்துலயே, என் குரலுக்கும், படிக்கிற விதத்துக்கும் விமர்சனம் மோசமாவே வந்துச்சு. இதெல்லாம் ஒரு குரலா, நாய் குரைக்கிற மாதிரி செய்தி வாசிக்கிற இப்படி பல. இதயெல்லாம் தனியாதான் கடந்து வந்தேன். வீட்ல சொல்லவும் முடியாது. சொன்னா வருத்தப் படுவாங்க. இப்படியே ரெண்டு மூனு மாசம் போனுச்சு. 

இதுவும் கடந்து போகுங்கற மாதிரி வாழ்க்கையும் கொஞ்சம் மாற ஆரம்பிச்சுச்சு.  என் குரலை விமர்சனம் செஞ்சவங்களே அத பாராட்ட ஆரம்பிச்சாங்க. ஆனா, ஒரு செய்தி வாசிப்பாளர்னா இப்படிதான் இருக்கணும்னுங்கற கட்டுப்பாடு மீண்டும் என்னை அழுத்தத்துக்கு தள்ள ஆரம்பிச்சுச்சு. செய்தி வாசிக்கிறவன், செய்தி வாசிக்கிறவன் மாதிரிதான் உடுத்தணும் பேசணும், பழகணும், மத்த கனவெல்லாம் வச்சிக்கக் கூடாதுன்னு பல பேச்சுகள். இன்னும் மறக்க முடியாத ஒரு சம்பவம்.. கெஃபேல சாப்டுக்கிட்டு இருக்கும்போது ஒருவர் வந்தார். "உனக்கு என்ன ஆர்.ஜே ஆகணுங்குற ஆசையா. அதெல்லாம் வச்சிக்காதே.. வந்தியா செய்தி வாசிச்சியா போனியான்னு இரு"ன்னு என் மூஞ்சுக்கு  நேர சொன்னாரு. அவர் எதுக்கு அப்படி சொன்னாருன்னு தெரில. ஆனா என் மனச ரொம்ப பாதிச்சுச்சு. அப்போ முடிவ பண்ண சாகறத்துக்குள்ள ஒரு நாளாவது அந்த ஆர்ஜே நாற்காலில ஒக்காந்தரணும்னு. 

என் செய்தி ஆசிரியர் மோகனதாஸ் சாரின் அறிவுரையோடு, செய்தியை வித்தியாசமான பாணியின் எழுதவும் வாசிக்கவும் ஆரம்பிச்சேன். முதலில் அதுக்கும் விமர்சனங்கள் வந்தன. மிரட்டல் காலும், துப்பி ஒரு சோசியல் மீடியா போஸ்டும் அதில் அடங்கும் . ஒரு மூத்த ஊடகவியலாளர், நானுன்னு தெரியாம, என்னிடமே என்னை விமர்சனம் செய்தார். இருந்தாலும், நான் போன பாதையை மாற்றவில்லை. சிறுக சிறுக பாராட்டுகளைச் சம்பாதிக்க ஆரம்பித்தேன். வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. விளம்பரங்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்த எனக்கு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பும் வர ஆரம்பித்தது. இப்படி ஒரு புறம் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ஆர்ஜே ஆகக் கூடிய வாய்ப்பும் கிட்டியது. அதற்கான பயிற்சியும் போய்க் கொண்டிருந்தது. ஆனால் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அவனுக்கு ஏன் அந்த வாய்ப்பைக் கொடுத்தீங்கன்னு யாரோ கேட்டு அதையும் நிறுத்திவிட்டார்கள். கனவு நனவாக போகிற தருணத்தில் அது சுக்கு நூறாக போனது மிகப் பெரிய வேதனை.. ஒரு கரு கலைந்த வலி..

ஒரு கதவை சாத்தினால், இறைவன் மறு கதவைத் திறப்பான். அதுப்போல தொலைக்காட்சித் தொகுத்து வழங்கும், வாய்ப்புக் கிட்டியது. பலமுறை நேர்முகத் தேர்வுக்கு சென்று தோல்வி கண்ட எனக்கு, எனக்கென உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி உருவானது. "செய்தி வாசிக்கிறவனுக்கு எதுக்கு ஷோ கொடுக்கிறீங்கன்னு" இதற்கு முன் கிடைத்த வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தனவங்களே அந்த வாய்ப்பையும் வெற்றிகரமாக கெடுத்தார்கள். ஆனால் அதுவும் நல்லதுக்கே. அவர்கள் அந்த வாய்ப்பைக் கெடுக்கவில்லை என்றால், விழுதுகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிட்டியிருக்காது. வாழ்க்கையும் மாறியிருக்காது.

விழுதுகள் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு, மற்றொரு தடை எனக்குக் காத்திருந்தது. நிதிப் பிரச்சினைதான். வீட்டில் ஒட்டு மொத்த செலவும் என்னுடைய வருவாயை நம்பி இருக்கும் போது, நிரந்தர வேலையை தொடர்வதா, நிரந்தரமற்ற வேலையை ஏற்பதா என்ற குழப்பம் இருந்தது. இரண்டையும் செய்யும் எண்ணத்தில்தான் இருந்தேன். மேலிடத்தில் இருந்து அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனால் சிலர், அவனுக்கு மட்டும் ஏன் அந்த தனி சலுகை என பிரச்சினை செய்ய, நிரந்தர வேலையை விட வேண்டியிருந்தது. அவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்தார்கள்.. அக்காவிடம் கேட்டேன, அம்மாவிடம் கேட்டேன். தைரியமா போ பாத்துக்கலாம் என்றார்கள். இருந்தாலும், அக்காவின் பண உதவியின்றி எப்படியாவது சமாளித்திட வேண்டும் என்று நினைத்தேன். காலையில், விழுதுகளுக்குப் போவேன், மதியம் ரேடியோவுக்குப் போவேன், இரவு க்ராஃபிக் வேலைக்குப் போவேன். தூக்கமின்றி மூன்று மாதம் சேர்க்க வேண்டியதை சேர்த்து, பணபிரச்சினையை நானே தனியே சமாளித்தேன். அன்று முடிவு எடுக்கும் போது, அது சரியா தவறான்னும் எனக்குத் தெரில ஆனா இன்று அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் புரிது. அது சரியான முடிவுதான்னு. 

எல்லா வெற்றிகளுக்கும் பின்னாடி பல ரணங்கள் இருக்கின்றன. அவை ஆறும் தருணமே வெற்றியின் கொண்டாட்டம். எள்ளி நகையாடிவர்களுக்கும், இழிவுப்படுத்தியவர்களுக்கும், புறம் பேசியவர்களுக்கும் புறக்கணித்தவர்களுக்கும் ரணங்களை‌ மட்டும்தான் கொடுக்கத் தெரியும். அவற்றை ஆற்றும் ஆற்றல் நம்மிடமே.  அய்யோ இவுங்க இப்படி சொல்லிட்டாங்களே அவுங்க அப்படி சொல்லிட்டாங்களேன்னு நமக்கு நாமே எல்லையை வகுத்துக்க கூடாது. வானமே எல்லை. என்னை கேட்டால் அது கூட இல்ல. மனம் இருக்கும் வரை பறக்கும் தூரம் வரை பறக்கலாம். 

அன்புடன்
ஸ்ரீ குமரன் முனுசாமி



Comments

  1. You are such an inspiration to to youths out thr. Anyway im a big fan of u.. All the best.. & Keep rocking..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

கைப்படாத ரோசா